புத்தரைப் பற்றிய நீள்கவிதை ஒன்று

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

தேவனின் திருக்கரம்

அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்

விறகுவெட்ட வந்தவனின் கால்கள்

புதைகுழியில் சிக்கியது

கொஞ்சம் கொஞ்சமாக

மண்குழம்பு அவன் உடலை

விழுங்கிக் கொண்டிருந்தது

எத்தனையோ கோடி மனிதர்களை

உண்டு செரித்த வயிறல்லவோ

அதற்கு!

அவனது வாய் இறைவனின்

நாமங்களை உச்சரித்து அழைத்தது

அவனது கண்களும் மண்ணுக்குள்

புதைந்தன

மேலே நீட்டிக் கொண்டிருந்த

அவனது கைகளை

ஒரு உருவம் பற்றியது

சேற்றிலிருந்து மேலே வந்த அவன்

கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்

வேதத்தையும், சடங்குகளையும்

மறுத்துப் பேசியதால்

தன்னுடைய கிராமத்தினரால்

கல்வீசித் துரத்தப்பட்ட

புத்தரல்லவோ இவர்

எனது கையினால் வீசப்பட்ட கற்களால்

காயமடைந்த கரங்களா

என் உயிரைக் காப்பாற்றியது

என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்

உயிரற்ற ஓலைச் சுவடிகளில்

இறைவனைத் தேடினோம்

உயிர்களின் மேல் காட்டும் கருணையே

கடவுளெனப் போதித்த

கண்ணெதிரே நிற்கும்

ஜீவனுள்ள மனிதனை மறந்து!

0 கருத்துகள்:

கருத்துரையிடுக