சமீபத்திய கவிதைகள்

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010


பரஞ்ஜோதி

கனவே கனவே

கதை பல சொல்லு

மாயக் கண்ணன் வருவான்

அவள் கரம்பற்ற என்று

நிலவே நிலவே

நிழல் போல தொடர்ந்து செல்லு

எந்த ஆடவனும் ஆசை கொண்டு

எழிலரசியை பின்தொடராவண்ணம்,

அரணாய் நின்றிடு

அன்பை பேராயுதமாகக் கொண்டிடு

நதியே நதியே

நங்கையின் ஸ்பரிசம் உணர்ந்த நதியே

நாயகன் கண்முன் வரும் வரை

அவனை நினைப்பதால்

மங்கைக்கு எழுந்திடும் உள்ளக்கொதிப்பை

உனது நீரோட்டத்தினால்

நீ அடித்துச் சென்றிடு

காற்றே காற்றே

தோழி போல அவள் தேகம் உரசி

தேவியின் கன்னம் வெட்கத்தால்

சிவந்திடும வண்ணம்

தலைவனின் சுவாசக்காற்றின் அனலை

என்னால் தாங்க முடியவில்லையென

காதோரம் ரகசியமாய சேதியொன்று சொல்லிடு

மழையே மழையே

வானை பொத்துக் கொண்டு

மண்ணில விழும் மழையே

அவள் தேகத்தை நீ நனைப்பதால்

அணைந்துவிடாது

புவியரசியின் மோக நெருப்பு

சிலுவைப்பாடு

குழந்தை இயேசு படம்

அத்திப்பூத்தாற் போல்

அங்கொன்றும் இங்கொன்றுமாய்

அரிதாக வீடுகளை அலங்கரிக்கும்

மலைப்பிரசங்கப்படம்

குறிஞ்சி மலர் போல

வாழ்நாளில் இரண்டு தடவை

கண்ணில் அகப்பட்டாலே

பேரதிசயம் தான்

கடைசி விருந்து படம்

நாம் நுழையவே முடியாத,

மேல்தட்டு கனவான்களின்

ரசனையை திருப்தி செய்ய

அவர்களுடைய

மாடமாளிகையில் மாட்டப்பட்டிருக்கும்

சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் படம்

எலலா தேவாலயங்களிலும்,

கிறிஸ்தவர்களின் வீடுகளிலும்

நீக்கமற நிறைந்திருக்கும்.

இருள் அகன்றது... பேரொளி பிறந்தது...

மண்ணின் மைந்தர்களின்

கரங்களனைத்தும் ஒன்று சேர்ந்தது

வலிமை பிறந்தது; வனவாசம் முடிந்தது.

சிறிய அலைகளெல்லாம் ஒன்று சேர்ந்தது

ஓர் நாளில் ஆழிப்பேரலையாய்ப் பாய்ந்து

பரங்கியர்களை கப்பலேறிப் பயந்தோடச் செய்தது.

எண்ண அலைகளெல்லாம் ஒன்றில் குவிந்தது

விடுதலை அடைவதற்கு முன்னமே

அந்நிகழ்வைக் கனவு கண்டு இன்புற்று

ஆடிப்பாடும் பாடலாய் புனைந்த

கவிஞன் உள்ளத்திலிருந்து

தமிழ் ஊற்று பெருக்கெடுத்து

தேசத்தை நனைத்தது.

பலரின் செங்குருதி பாரத மண்ணில் கலந்தது

இனிவரும் தலைமுறையாவது

சுதந்திரப்பறவையாய் ஆகாயத்தில் சிறகுவிரிக்க...

அடக்குமுறைகளை எதிர்த்து நின்ற

மக்களின் எழுச்சி உச்சகட்டத்தை அடைந்தது

அதன் அதிர்வு தாங்காமல்

அடிமைக் கூண்டு உடைந்தது.

விடுதலை...விடுதலை...விடுதலை-

என்ற ஆனந்தக் குரல்

எங்கும் ஒலித்தது

எங்கள் மண்ணில் ஒலித்தது.

காந்தியின் கதராடையும், கைத்தடியும் ஜெயித்தது

பகட்டும், பீரங்கியும் கொண்டு யுத்தம் பல செய்து

மனித மாமிசத்தை ருசித்த குள்ளநரிக் கூட்டம் தோற்றது.

சரித்திரமானது சகலமும் சரித்திரமானது

அப்பக்கங்களைப் புரட்டிப்பார்க்குது

அகிலமே ஆச்சர்யத்துடன் இன்று புரட்டிப்பார்க்குது



மிருகஜாதி

சுற்றமும், நட்பும்

எனது ஊனச்சிறகுகளை

அவ்வப்போது

தங்களது கொடிய கரங்களால்

உடைத்தெறிந்துவிட்டு

நினைத்ததை முடித்ததில்

மனநிறைவு கொள்கின்றனர்

நிலை மாறும உலகில்

சற்றே தாழப்பறக்க நேர்ந்தாலும்

என் தலைக்கு மேலே

அவர்களின் உயரம் இருக்கும்படி

கவனமாய் பார்த்துக்கொள்கின்றனர்.

கானல்நீர்

அடர்ந்த இருள் கவிந்த

வாழ்க்கைப் பாதையில்

நிலைச்சுடரின் பிரகாசம்

கூப்பிடு தொலைவில்

கண்ணில் தெரிந்தது

அதை நோக்கி

எனது கால்கள் குதூகலமாய்

விரைந்து நடக்கத் தொடங்க,

அந்தச் சுடரை நெருங்க நெருங்க

அந்த பேரொளி வெள்ளம்

பின்னோக்கி தனது

கிரணங்களை இழுத்துக்கொண்டது

எனது கஷ்டங்களுக்கு

ஒரு தீர்வென்பது

பாலைவனக் கானல் நீரானது.



பூமராங் வாழ்க்கை

மண்ணும், காற்றும், நீரும்

கொஞ்சம் கொஞ்சமாக

உயிரோடு தின்றுகொண்டிருக்கின்றன

எனதுடலை

அதனை அலட்சியப்படுத்தி

செலுத்தப்பட்ட அம்புபோல

சுயப்பிரக்ஞை சிறிதும் அற்று

விரைந்து கொண்டிருக்கிறேன்....

எந்த வில்லினுடைய நாணின்

இழுவிசையிலிருந்து

எந்த இலக்கை நோக்கி

விடப்பட்டு இருக்கிறேன்

என்ற கேள்வி தோன்றி

வேதாளம் போல்

எனது தோளில் வந்தமர்ந்து கொண்டது

நான் இலக்கை சென்றடைவேனென

நம்பிக்கை வைத்து

என்னையவன் எய்து இருக்கின்றானா?

வழியில் எனது லயம் தவறிய

தப்புத்தாளங்களை

கண்ணிமைக்காமல் கவனித்துக்

கொண்டிருந்தானா?

மீண்டும் அவன் கைகளில்

தவழ நேருமோ

நியாயத்தீர்ப்புக்காக அவன் எதிரில்

கைகட்டி நின்று

சாட்சிக் கூண்டில் சிறைபட நேருமோ

அச்சூழ்நிலையில்

உனது படைப்பு பூரணமடையாத போது

எப்படி அந்தப் படைப்பு நடத்தும்

வாழ்க்கை பூரணமாக

இருக்கவேண்டுமென்று நீ ஆசைப்படலாம்? ’

என்ற கேள்வியை பதிலாக்கி

அச்சமற்று நின்றிடுவேன்

அச்சபையில்

மானுடத்தின் கேள்வியினை

நானொருவன் கேட்டிடுவேன்.

‘தொலைந்து போன நிழலைத் தேடி’ கவிதைத் தொகுப்பின் முன்னுரை

வியாழன், 18 பிப்ரவரி, 2010

இவ்வுலகில் சிறு நகரத்தில் வாழும் ஒரு ஜீவனின் உயிர்த்தேடலின் ஆரம்பமே இக்கவிதைத் தொகுப்பு. வாழ்க்கையின் அன்றாடச் சலிப்புகள், சோர்வுகளை உள்ளத்திலிருந்து விரட்டியடித்து, தேடலே ஒவ்வொரு கணத்தையும் சுவாரஸியம் மிகுந்த ஒரு நாவலின் பக்கங்களை எதிர்ப்பார்ப்புகளோடு புரட்டுவதைப் போன்று

ஒவ்வொரு விடியலையும் எதிர்கொள்ள வைக்கிறது.நம்பிக்கைஇந்த ஒரு வார்த்தையை அடித்தளமாகக் கொண்டு மனிதவாழ் முழுவதும் கழிகிறது.நாளை விடியும் என்ற நம்பிக்கையே ஒவ்வொரு மனிதனையும் இந்த இரவினில் அமைதியாகப் படுக்கையில் உறங்கச் செய்கிறது. தேடலும், நம்பிக்கையும் இக்கவிதைத் தொகுப்பில் எங்கும் விரைந்து கிடப்பதைக் காணலாம்.

சில கவிதைகள் நான்கு அல்லது ஐந்து வரிகளில் முழுமை பெற்றுவிடும், சில கவிதைகள் இருபத்தைந்து வரிகளுக்கு மேலும் கருவின் மையத்தை நெருங்காது விலகியிருக்கும். கவிதை ஒரு உள்உந்துதலால் எழுதப்படுவது.வாசிக்க, வாசிக்க பல தளங்களுக்கு நம்மை பயணப்பட வைககிறது.உங்களின் முயற்சிகளை ஊக்கப்படுத்தியும்,விரக்தியை விரட்டியடித்தும், அன்புக்கு நீர் பாய்ச்சியும், அநீதிகளை அடித்துநொறுக்கியும்,இப்படி ஒரு மொழி தன் மண்ணின் மைந்தர்களைத் தன் எழுத்துக்களால் செயல்படவைக்கிறது.இதில் கவிஞன் ஒரு கருவியே, மொழியே எடுத்தாள்கிறது, அவ்வப்போது விஸ்வரூபம் கொள்கிறது. மொழியை கொச்சையாக,இழிவாகப் பேசுபவனிடத்தில் ஆயிரம் கரங்கள் கொண்டு சீறிப்பாய்கிறது.எந்த மொழியும் தான் செழித்தோங்கி வளர தானே முயல்கிறது. ஒரு கவிஞன் தான் வாழும் காலகட்டத்தில் தம்மைச் சுற்றி நிகழும கசப்பான நிகழ்வுகளை தன்னுள் சமரசம் செய்து கொண்டு, எழுத்துக்களால் அதனைப் பதிவு செய்யமால் போனால்,அச்சமூகத்தி்ற்கு அவன் செய்யும் மிகப்பெரிய துரோகம் அது. இக்கருத்தினை உடும்பென பிடித்துக் கொண்டு படைக்கப்பட்டவை இக்கவிதைகள்.

இவ்வளவு காலம் விசாலமான அரண்மணையைப் போன்ற படைப்புகளுக்குள் பயணம் செய்த வாசகர்களை எனது சி்று குடிசைக்கு அழைக்கின்றேன்; அங்கு மின்விளக்கு இல்லாத இருளில் தரைமீது உங்களின் நிழல்கள் விழாது, அக்கணத்தில் நீங்களும் தேடத் தொடங்குவீர்கள் உங்களின் தொலைந்து போன நிழலை.

இந்தச் சிறு விழுதும் இன்னும் சில காலங்களில், ஆலமரமாகிய குடும்பவிருட்சத்தை தாங்கும் என நம்பிக்கை கொண்டு, என் முயற்சிக்கும், எழுத்துக்கும் ஊக்கம் அளித்து வரும் எனது தாய்,தந்தைக்கு இப்படைப்பைச் சமர்ப்பணம் செய்வதில் பெருநிறைவு கொள்கிறது இந்தக் கவிமனம்.

சிக்கல் சிங்காரவேலவா ஜீவனைச் சிவனாக்கிடுவாய் என்ற புத்தகத்திலிருந்து ஒரு பாடல்

புதன், 17 பிப்ரவரி, 2010

யாதுமாகி நின்றாய்

உலகுக்கு மூலாதாரம் சிவமாம்

அச்சிவத்திலிருந்து தோன்றிய பரஞ்சோதிப் பிழம்பாகி

உலக அன்னை பார்வதிதேவி மெச்சிகின்ற பிள்ளையாகி

எதிலும் ஜெயம் உனக்கு என்றவள்

தன் சக்தியை வேலாக்கி முருகனிடம் தந்துவிட்டமையால்

சிக்கல் சிங்காரவேலனாகி

முற்றும் உணர்ந்துகொள்ள இயலாத ஞானப்பொருளாகி

விரல்ரேகைகள் ஒன்றாய் அமைந்த மனிதர்கள் உலகில் உண்டோ

அறுசுவைகளில் ஒவ்வொருவருக்கும் ஒன்றொன்று பிடிக்கும் அன்றோ

ஆனாலும் அவரவர் பக்திபாவத்துக்கு ஏற்றபடி ஓடோடி வரும்

ஆறுமுகம் கொண்ட பன்னிருகரத்தனாகி

மண்ணில் பிறந்துவிட்டால் ஆறுபருவங்ளை அனுசரித்தே வாழவேண்டும்

பிறவிப் பிணி அறுக்க அனைவரும் தொழும்

ஆறுகோலங்களைத் துறந்து திருவோடு ஏந்தி

யாசகம் கேட்கும் பழநி ஆண்டவராகி

சிவனுக்கு ப்ரணவப் பொருள் உரைத்த குருவாகி

அசுரர்களால் அழிவு ஏற்படும் என அஞ்சி

தேவர்கள் தேவேந்திரன் தலைமையில் உன்னிடம் அடைக்கலம் கேட்க

சூரனை சம்ஹாரம் செய்து தர்மத்தை காத்திட்ட தேவசேனாதிபதியாகி

பழம் கிடைக்கவில்லை என்பதால்

தந்தையிடம் கோபித்து பழநிமலை மீது ஏறி அமர்ந்தவன்

தன்னை விட்டு விலகிப்போன பிள்ளை தற்குறியாகாமல்

தனிக் கோவில் எழுப்பி அவன் மீது திருமுருகாற்றுப்படை பாடுமளவுக்கு

தந்தையின் மதிப்பால் உயராமல் சுயஉழைப்பால் உயர்ந்த

உன்னை சிவனே வியக்குமளவு

தந்தையின் பந்ததத்தை அறுத்து நீ தரணிக்கே மைந்தனாகி

ஏட்டுப் படிப்பால் புத்திக்கு எட்டாத ஒன்றை

காட்டிலும், மேட்டிலும், காவியும், கமண்டலமும் கொண்டு அலைந்து திரிந்து

உடலே கரையான் புற்றால் மூடுமளவுக்கு தவம் செய்து

கோடான கோடி முனிவர்கள் தேடியலையும் தத்துவப்பொருளாகி

ஐம்பூதங்களின் அடிமையாய் உழலும் அனைவரையும்

நாற்பறமும் ராட்சச சுவர் கொண்ட இச்சிறைச்சாலையில்

வலியவர்களால் கொத்தடிமையாக நடத்தப்படும் அப்பாவிகளை

கருணை கொண்டு விடுவித்தருளும் நீதிநெறி தவறாத நல்அரசனாகி

வயிற்றிலும், தோளிலும் சுமந்து

அன்பை வாரி வாரி பொழிந்து

தான் பசியாறாவிட்டாலும்

இருக்கும் உணவை புசிக்கக் கொடுத்து

வறுமையில் வாடச்செய்யாமல்

சீராட்டி பாராட்டி தன் குழந்தைகளை வளர்க்கும் தாய், தந்தையாகி

ஏறாத கோவிலில்லை

செய்யாத பரிகாரமில்லை

மழலை ஒலி கேட்கின்ற மகத்தானதொரு வாழ்வைத் தா

என்று வேண்டி நிற்போர்க்கு அருள்புரிந்து

தொட்டிலில் வீறிட்டழும் தெய்வக் குழந்தையாகி

உறவுகளால் கைவிடப்பட்டு

அனாதையாய் வீதியில் திரிந்து இறந்துபோகும் முதியவர்களுக்கு

தன்னோடு வீரபாகு முதலிய வீரர்களை அழைத்து வந்து

ஈமச்சடங்கு செய்து

மனச்சாந்தியுடன் அவர்களை மேலுலகுக்கு அனுப்பும்

பெற்றெக்காத தவப்புதல்வனாகி

பலவருடங்காளாய் வெறும் படிக்கல்லாய் இருப்போர்க்கு

அவர்களின் உள்ளே ஒளிந்திருக்கும் அற்புதசிற்பத்தைக் கண்டு

அக்னியை வலம் வந்து நம்பிக்கையாய் கைப்பிடித்து

வலித்தாலும் பரவாயில்லையென்று உளியால் அடித்தடித்து

பிறர் வணங்கும் தெய்வச்சிலையாக மாற்றும் மனைவியாகி

சிறுகுடிசையில் பெண்ணாய் பிறந்ததினால்

கன்னியாகவே காலம் கழித்திட வேண்டுமா குமரா

என் கையேந்தி தாலி பாக்கியம் கேட்போர்க்கு

செல்வம் ஆற்று நீரென காலத்தில் வந்து போகும்

வாழ்வதற்கு நல்மனம் போதும்

குணத்தால் பிறர் குறைசொல்ல முடியாத வாழ்வு வாழ்ந்தால்

ஊற்று நீரென பதினாறு பேறுகள் பொங்கி வந்து

பாதங்களில் தவங்கி்டக்கும் - என்று

நல்வார்த்தை கூறி கைப்பிடிக்கும் உத்தம புருஷனாகி

காசு பணம் கையில் இல்லாமல் கரைந்தவுடன்

தாயாய் பிள்ளையாய் பழகி கூடிக்களித்த சொந்தபந்தம்

அந்நியமாய் அற்பப்புழுவினைப் போல் நம்மைப் பார்க்கும்

பல நண்பர்கள் என் பெயரைக் கேட்டு

அப்படியொருவனிடம் எனக்கு பழக்கமில்லை என ஒதுங்கிவிட

என்னுடைய நஷ்டத்தில் பாதியை நீ தோளில் சுமந்து

புதைகுழியிலிருந்து என்னை மீட்டெடுத்து

மானம் காத்த உயிர் நண்பனாகி

கண்களில் பார்வையாகி

செவிகளில் ஓசையாகி

நாசியில் மணமுமாகி

நாவினில் செந்தமிழ் பாடலாகி

உடலில் உறையும் உயிராகி

பயணிக்கும் பாதையாகி

உடலுக்கு வாழ்வளிக்கும் வளிமண்டல காற்றாகி

உடலுக்கு சக்தியளிக்கும் உணவான காய், கனியாகி

அனைத்தையும் தன்னுள்ளே அடக்கியிருக்கும் ஆன்மாவாகி

எங்கெங்கு காண்கையிலும் முடிவில்லா வெளியென

நீண்டிருக்கும் விண்ணாகி

பாலைவன மண் மாறிவிடாமல்

தன் நீரை ஆவியாகக் கொடுத்து

பூஞ்சோலையாய் பூமியை வைத்திருக்கும் கடலாகி

பேய்களுக்கும், பிணிகளுக்கும்

அடுத்தவரை துன்பப்படுத்தி சுகங்காணும் எவருக்கும் சத்ருவாகி

புறக்கவர்ச்சியினால் கவரப்பட்டு மனம் எங்கெங்கோ செல்கிறதே

உனை நினைக்கும் அதே மனம் ஈக்களைப் போல்

மலத்திலும் போய் உட்கார்ந்து கொள்கிறதே

உனை தரிசிக்கும் அதே கண்கள் தீயச் செயலைக் காண

ஆர்வம் கொண்டு அலைகிறதே

உனது திருப்புகழை கேட்கும் அதே செவிகள்

மற்றவர்களின் அந்தரங்க செய்திகளை

குதூகலத்துடன் கேட்க விழைகிறதே

உனை பக்தியினால் கைகூப்பித் தொழும் அதே கைகள்

பெண்உடலை ஆரத்தழுவ மோகம் கொண்டு துடிக்கிறதே

உனது திருக்கோவிலை நோக்கிவரும் அதே பாதங்கள்

பாவத்தை கூவி விற்கும் பரத்தையர் வீடுகளுக்கும் செல்கிறதே

உனது பெருமையினைப் பாடிடும் அதே வாய்

அகராதியில் இல்லாத அத்தனை கெட்ட வார்த்தைகளையும்

கோபத்தினால் பிறர் மீது உமிழ்கிறதே

இத்தனை கேடுடைய மனிதப்பிறப்பெனக்கு

இந்திரப்பதவி கொடுத்தாலும் வேண்டாம் வேண்டாமப்பா

இனிவொரு கருவறையில் என் உயிர் புகாமல்

பிறவாமை வரம் கொடுத்து

முருகா உன் திருவடியில் ஏற்றுக்கொள்வாய்

சரண் புகுந்தேன்

சண்முகா உன் சரணமப்பா.

போதி மரத்தைப் பற்றிய நீள்கவிதை ஒன்று

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

போதி

பாலகனாய்

மரத்தைச் சுற்றி விளையாடும் பருவத்தில் தான்

அம்மரம் அவனுடன் அளவளாவத் தொடங்கியது

பச்சை பசேலென

எத்தனை இலைகள்

விரிவதற்குக் காத்திருக்கும் மொட்டுக்கள் பல

மணம் வீசும் மலர்கள்

பூக்களைத் தேடி வரும் பட்டாம்பூச்சிகள்

உனக்கு மகிழ்ச்சி தானே என்றது

சிறிது நேரத்தை அங்கு கழித்த அவன்

அவ்விடம் அலுத்துப் போகவே

மற்ற சிறுவர்களோடு விளையாட

மைதானம் நோக்கிச் சென்றான்

ஒவ்வொரு நாளும் அவன் வருவானென

எதிர்ப்பார்த்துக் காத்திருந்து

ஏமாற்றமடைந்தது அம்மரம்

விடலைப் பருவத்தில்

நண்பர்கள், திரைப்படம், கடற்கரை-என

சுற்றுவதற்கே

நேரம் சரியாகயிருந்தது அவனுக்கு

மரத்தை மறந்தே போனான்

காதல் அவன்

வாலிபக் கோட்டையை

முற்றுகையிட்டது

அகல்யா என்றொரு யுவதியின் தலைமையில்

காதலுக்கு மனம் தேவை

கல்யாணம் முடிந்து

குடும்ப ஓடத்தை தடையில்லாமல் நகர்த்த

பணம் தேவை - இதை உணர்ந்து

முதல் போட்டு தொழில் துவங்கி

சமூகத்தில் இன்னாரென முகவரியோடு

எனை அணுகுங்கள்

தலைகுனிந்து உங்கள் மலர்மாலையை

பெருமித்துடன் தோளில் ஏற்கிறேன்-என

அவள் கூற

வியாபாரம் தொடங்க

பணம் தேவையே

எப்படிப் புரட்டுவது - என

அவன் மரத்தடியில அமர்ந்து

சிந்திக்கும் வேளையிலே

மரம் அவனிடம் பகன்றது

உன் நிலை எண்ணிக் கலங்கினேன்

இவ்வளவு காலம் எனை மறந்து

வாலிபக் குதிரையில

தன்னிலை மறந்து பயணம் செய்தாய்

காதல் கைகூட

செல்வம் வேண்டுமென

அவள் நிஜத்தை உணர்த்தியபோது

தாமாகவே உனது கால்கள்

நான் இருக்கும் திசையில் திரும்பி

என் நிழலை நோக்கி

வந்தமர்ந்து கொண்டன

துயரப்படாதே

உன் துன்பத்தைப் போக்க

வழியொன்று சொல்கிறேன்

என்னை வேரோடு வெட்டியெடுத்து

மரச்சாமான்கள் செய்யும்

தச்சனிடம் விற்றுவிடு

உனக்குப் பொருள் கிடைக்கும்

அகல்யாவின் அருகாமை

உன் இளமைக்கு

புத்துயிர் கொடுக்கும்

எனக் கூறி முடித்ததும்

அவன் முகத்தில் ஆயிரம்வாட்ஸ் பிரகாசம்

ஞானத்தினால் அல்ல

அவளை அடைய வழி தெரிந்ததினால்

அண்ணாந்து மரத்தைப் பார்த்தான்

கருணையினால் அல்ல

எவ்வளவிற்கு விலைபோகுமென்று

கண்காளாலே அளப்பதற்கு

விரைந்தோடினான்

அகல்யாவை அணைப்பதுபோன்ற

அவனுடைய லட்சியக் கனவை நனவாக்கிட

முதல் படியாக

மரத்தை வேரோடு சாய்த்திட

கோடாரியை எடுப்பதற்கு!

புத்தரைப் பற்றிய நீள்கவிதை ஒன்று

தேவனின் திருக்கரம்

அடர்ந்த கருமை சூழ்ந்த வனாந்திரம்

விறகுவெட்ட வந்தவனின் கால்கள்

புதைகுழியில் சிக்கியது

கொஞ்சம் கொஞ்சமாக

மண்குழம்பு அவன் உடலை

விழுங்கிக் கொண்டிருந்தது

எத்தனையோ கோடி மனிதர்களை

உண்டு செரித்த வயிறல்லவோ

அதற்கு!

அவனது வாய் இறைவனின்

நாமங்களை உச்சரித்து அழைத்தது

அவனது கண்களும் மண்ணுக்குள்

புதைந்தன

மேலே நீட்டிக் கொண்டிருந்த

அவனது கைகளை

ஒரு உருவம் பற்றியது

சேற்றிலிருந்து மேலே வந்த அவன்

கண்களால் அவ்வுருவத்தைப் பார்த்தான்

வேதத்தையும், சடங்குகளையும்

மறுத்துப் பேசியதால்

தன்னுடைய கிராமத்தினரால்

கல்வீசித் துரத்தப்பட்ட

புத்தரல்லவோ இவர்

எனது கையினால் வீசப்பட்ட கற்களால்

காயமடைந்த கரங்களா

என் உயிரைக் காப்பாற்றியது

என்றெண்ணி வெட்கித் தலைகுனிந்தான்

உயிரற்ற ஓலைச் சுவடிகளில்

இறைவனைத் தேடினோம்

உயிர்களின் மேல் காட்டும் கருணையே

கடவுளெனப் போதித்த

கண்ணெதிரே நிற்கும்

ஜீவனுள்ள மனிதனை மறந்து!

கவிதை தொகுப்புகளிலிருந்து சில கவிதைகள்

திங்கள், 8 பிப்ரவரி, 2010

உள்வெளிப்பயணங்கள்

வான்வெளியில் மேகங்களின்

அணிவகுப்பைப் போன்றது

மனதில் நினைவலைகள்

உற்றுப் பார்த்தால்

வெவ்வேறு உருவங்கள் புலப்படலாம்

அம்முகில் கூட்டங்களில்

கடிவாளமில்லாத புரவியென

ஐம்புலன்கள், திசைக்கொன்றாய்

மானிடனை இழுத்துச் சென்று

சகதியில் அவனை விழவைத்து

சுற்றத்தார் கைகொட்டிச் சிரிப்பதை

சுற்றி நின்று வேடிக்கைப் பார்க்கும்

மனப்பரப்பில் எரியும்

ஆசையெனும் வேள்வித்தீயில்

ஆகுதியாகும்

விட்டில் பூச்சியைப் போல்

மனித உடல்கள்

காலைக் கதிரொளி

பனிப்போர்வையை விலக்கியது

பறவைகள் கீச்சென்று சத்தமிட்டு

சிறகடித்துப் பறந்தன

மாலையில வாடிப்போய்விடுமோமென்று

வருத்தம் கொள்ளாமல்

மலர்கள் மலர்ந்து நின்றன

தென்றலின் பாடலை

மரங்கள் தலையசைத்து

ரசித்தன

தான் கரையில் ஒதுக்கிய கிளிஞ்சல்களை

வந்து பொறுக்கும் அரும்புகளைக் காண

கடலலை காத்திருந்தது

வைகறை மெளனத்தில் கீதம் பாட

தேவக்குயில் ஓடோடி வந்துவிட்டது

கருமேகத்தில் குமரக்கடவுளைக் கண்டது போல

தோகை விரித்தாடியது மயில்

வண்டுகள் அன்றுதான் முதல்முறையாக

தேனை சுவைத்தது போன்று

ரீங்காரமிட்டன

புல்லிதழ்களின் மீது படிந்திருக்கும்

பனித்துளி பிரியாவிடை பெற்றுச்சென்றது

இன்றைய பொழுது

நமக்கு இறைவன் அளித்தது

இயற்கை அதனை நன்குணர்ந்துள்ளது

மனித மனம் ஆதியிலிருந்தே அதனை

மறந்து வந்துள்ளது.

தொலைந்து போன நிழலைத் தேடி...

பால்யத்திலிருந்து

எனைத் தொடர்ந்து வந்த நிழல்

இன்று தொலைந்து போய்விட்டது!

எனது பாதத்தடங்கள்

கடந்துவந்த பாதையை உளவறிந்து

எங்கு போய்ச் சொன்னதோ?

உணவின்றி, நீரின்றி, காற்றின்றி கூட

ஒருவன் இப்புவியில் வசிக்கலாம்

நிழலின்றி இருக்கமுடியுமா?

மற்றவர்களின்

நிழல்களைப் பார்க்க நேரும்போதெல்லாம்

விசாரிக்கிறேன்

எனது நிழலின் நலத்தைப் பற்றி!

அப்பா என்கிற ஸ்தானம்

அவனுடைய மனைவியின்

முதல் பிரசவத்துக்கு குறிக்கப்பட்ட

அந்த நன்னாள் நெருங்கிக் கொண்டே வந்தது

பணியாற்றும் இடம்

பலமைல் தொலைவிலிருந்தும்

பிறக்கப்போகும் ஒரு உயிருக்காக

பிரார்த்தனை செய்தபடியே

அவன் இதயம் துடித்துக் கொண்டிருந்தது

அந்த நகரத்தின்

சாலையோரக் கடைகளில் ஒட்டப்பட்டிருந்த

சின்னஞ்சிறு குழந்தைகளின் படங்களும்

கற்பூரமுல்லை ஒன்று.... -என எதேச்சையாக

அருகாமையில் ஒலித்த இனிய கானமும்

அவன் மனதைப் பிசைந்தன.

அன்றைய மாலைப் பொழுதில

அடுக்குமாடி வணிக வளாகமொன்றில்

டாடி என்றழைத்தபடி

ஓடிவந்த குழந்தையொன்று

தவறுதலாக அவன் கால்களைக்

கட்டிக் கொண்டது

சில வினாடிகள் கழித்து

அண்ணாந்து முகம் பார்த்து

தனது தந்தையல்ல என்றுணர்ந்த பின்னர்

அந்நியர் ஸ்பரிசத்தை தொட்டுவிட்ட

சங்கோஜத்தில் விலகிச் சென்றது

நிமித்தங்கள் அவன் தந்தையானதை

இந்நிகழ்வினால் உறுதிப்படுத்த

நான் அப்பாவாகிவிட்டேன் என்ற எண்ணம்

அவன் உள்ளத்தில் உதித்த அக்கணத்தில்

வாயில் கைப்பிடி சர்க்கரை போடாமலேயே

உடலில் ஓடும் உதிரம் கூட

அவனுக்கு இனித்தது.

இலையின் பாடல்

நான் இல்லாது போனால்

இப்புவியெங்கும் உள்ள

மரங்களனைத்தும்

மூளிகளாகும்.

நான் பச்சை

வண்ணம் சுமந்து

வசந்த காலத்தை

வளமுள்ளதாக்குகிறேன்.

நான் இன்னோர்

இலையாய்த் துளிர்க்க

வேனிற்காற்றின் வேகத்தில்

மரங்களினுடனான

உறவுப்பிணைப்பை

முறித்துக்கொண்டு

மண்ணில் விழுகிறேன்.

நான் காணுமிடமெங்கும்

நிறைந்திருப்பினும்

மலர்களின் மீது மட்டும்

மோகம் கொண்டலையும்

மனிதர்கள் என்னை

மரத்தின் ஒரு பாகமாக

மட்டுமே பார்க்கின்றனர்.

நானின்றி மொட்டு மலர்ந்திடுமா?

காய் கனிந்திடுமா?

மரம் நிலைத்திடுமா?

உணவாகிப் பல நோய்கள்

தீர்க்கிறேன்.

எருவாகிப் பயிர்களைக்

காக்கிறேன்

எரிபொருளாகி

வாகனங்களை

இயக்குகிறேன்.

என் மீது உரசாத காற்றை

சுவாசித்த நபருண்டா

இவ்வுலகில்?

பழுத்து மஞ்சளாகி

உதிரும்வரை

காலையில் நடைப்பயிற்சி

செல்லும் வழியெங்கும்

உங்களின் கண்களுக்கு

இதமாக இலவசமாய்

குளுமை தருகின்ற

பூமித்தாய் தன் மேனியில்

உடுத்தியிருக்கும்

பச்சை வண்ண ஆடை நான்!

மலைப்பிரசங்கம்

வசிக்குமிடம்

இடுகாடு என்பதால்

அருவருப்புக் கொள்ளவில்லை ஈசன்

நட்பு கொள்வது

வானரத்தோடு என்பதால்

கேவலமாய் நடத்தவில்லை ராமன்

யார் மீது

பட்டுத்தெறித்ததற்காகவும்

வெட்கப்படுவதில்லை மழை

உடல் மீது

எதிர்பாராமல் உரசியதற்காக

ஓடும் நதியில் முங்கி எழுவதில்லை

காற்று

அக்னி

எவ்வுடலையும் எரித்து

பொன்நிறச் சாம்பலைக்

கொடுத்ததில்லை

மனிதர்கள்பால்

பேதம் அகன்றவனே

பேராண்மை உடையவன்

வெறும் ஆண்மையால்

உலகினில ஆட்டுமந்தையாய்

ஜனத்தொகை மிகுந்தது போதும்

மேய்ப்பனின் மலைப்பிரசங்கம்

மீண்டும் தொடங்கட்டும்

இம்மண்ணுலகில்....

கலிங்கா

வாளில் குருதி வழிய

உடல்கள சிதறிக் கிடக்க

ஈட்டியால் குத்தப்பட்டு

விழுந்துகிடக்கும் குதிரைகளின்

வேதனையொலி விண்ணைப் பிளக்க

இரு கண்களிலும்

விஷ அம்பு பாய்ந்த

யானைகளின் பிளிறல் சத்தம்

போர்க்களத்தை உலுக்க

உறுப்புகளை இழந்கவர்கள்

மரண ஓலம் எழுப்ப

அந்த நிமிடம் சூன்யமாக

மனிதக் குருதியில்

சாம்ராஜ்யக் கப்பலைச் செலுத்துவதா - என

இதயத்தில கருணை பொங்க

வாள் நழுவி விழ

மகுடம் மண்ணில் சரிய

உதடுகள் புத்தம் சரணம் கச்சாமி

என உச்சரிக்க

யுத்தத்தில் வென்றது அசோகரின் படை

அழிந்தது அவனது ராஜ்ய ஆசைகள்!

அவனும் மனிதன் தான்

கவிஞன் கற்பனை செய்தான்

கருணை பொங்கும் மனிதர்களை

அன்பினால் அரவணைக்கும் உறவுகளை

கால் இடறி விழும் வேளையில்

கண்டுகொண்டிராமல்

ஓடிவந்து கைகொடுக்கும் நணபர்களை

புறத்தை ஒதுக்கி

அகத்தை நேசிக்கும் அழகிகளை

தமிழ்க்கவியென்று சொன்னால்

தலைவணங்கி வழிவிடும்

அரண்மணையின் இரும்புக்கதவுகளை

அவன் கற்பனைச் செய்ததைப் போன்ற

சொப்பனலோகத்தை பணத்தால் சிருஷ்டித்து

கனவான்கள் பலர் இப்பூமியில் சுகித்திருக்க

அவனோ தன்னுடைய சுயகற்பனையைப் கூட

பிரசுரித்து காசாக்க முடியாமல்

பதிப்பக வாசலிலே

நீண்ட தாடியுடனும்,

கசங்கிய ஆடையுடனும்

நெடுநேரம்

எதையோ பறிகொடுத்தவன் போல்

காத்திருக்க ....

அக்கணத்தில்

கவிக்கு ஒரே வெறுப்பு

தமிழை அமுதமாக பருகியபோதும்

பாழும் வயிற்றுக்கு

இன்னும் பசிக்கிறதே என்று!

ஆன்மீகப் புத்தகம் முருகன் பாடல்கள்

எனது நான்காவது கவிதைத் தொகுப்பு

எனது மூன்றாவது கவிதைத் தொகுப்பு

எனது கவிதைத் தொகுப்பு கிடைக்குமிடம்

சங்கைப்பலகை.காம் sangapalagai.com

எனது இரண்டாவது கவிதைத் தொகுப்பு

எனது முதல் கவிதைத் தொகுப்பு

எனது புகைப்படம்

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

கவிதைகள்

உறக்கமற்றவனின் விடியல்

அவனது கிழக்கில்

கதிரவன் உதிக்காது

சந்தன மரக்கட்டில் கூட

முள்படுக்கையாக மாறும்

அவனது உடலே

அவனுக்குப் பாரமாகும்

அந்த நாளில்

நரகத்தின் நிழல் வீட்டினுள் கவிந்து

அங்கிருந்த வெளிச்சத்தை விரட்டியடிக்கும்

கண்கள் ஜீவ ஒளியிழந்து

தூக்கத்திற்குத் தூண்டில் போடும்

தாயோ, தாரமோ எவரேனும்

தனது தலையை மடியில் வைத்து

கேசத்தை வருடமாட்டார்களா - என

அவன் மனம் மானிட ஸ்பரிசத்துக்கு

ஏங்கித் தவிக்கும்

மரணம்-கடவுளின் அன்புப் பரிசாகவும்

வாழ்வு-கருணையற்ற கடவுள்

தனது கொடிய கரங்களால் எழுதிய

தீர்ப்பாகவும் படும்

நிமிடங்கள் யுகமாகும்

போகங்களில் எந்நேரமும் திளைக்கத் தோன்றும்

விரக்தியின் விளிம்பில்,

றெக்கை முளைக்காத கூட்டுப்புழுவாய்

உயிர்வாழ்வதை விட

மடிந்து மக்கிப்போவதே மேலெனத் தோன்றும்

கனவுலோகத்தால் கைவிடப்பட்டவனின்

கற்பனை இப்படிப்போகும் -

வங்கியில் கணக்கு வைத்திருப்பவருக்கு

மட்டும் தான் இரவுப்பொழுதில் உறக்கம்

அப்பணத்திற்கு வட்டியாக அளிக்கப்படும்

என சட்டம் இயற்றப்பட்டுள்ளதாக நேற்று

செய்தித்தாள்களில் படித்தது போன்ற

ஞாபகம் எழும்

தூக்கம் ஒன்றே துக்கம் குறைக்கும்

இலவச நிவாரணி

அது கண்களைத் தேடி வந்து

தழுவாதபோது

வாழ்வு மகள் பூமாலையுடனும்,

புன்சிரிப்புடனும் எதிரில் நின்றாலும்...

அவன் கரங்கள்

மரண தேவதையை ஆரத்தழுவிக்கொள்ளும்.




சபிக்கப்பட்டவனின் வாழ்க்கை

மனிதர்கள் வேட்டையாடி பயி்ற்சி பெற

விலங்காய்ப் பயன்படுவான்

குருதியை யாரும் கண்டதில்லையா

அவனை கிழியுங்கள் இரத்தத்தை ருசியுங்கள்-

என அறிவிப்புப்பலகை தொங்கும் அவன் கழுத்தில்

கண்கள் மூடியே இருக்கும்

காணச்சகிக்காது இவ்வுலக நடப்பு ஒவ்வொன்றும்

வாய் இறைவனின் நாமத்தை

மறந்தும் உச்சரிக்காது

தப்பித்தவறி வந்து காப்பாற்றிவிடப் போகின்றானோ

என்ற அச்சத்தில்

காதுகள் எப்போதும்

துரோகச் செயலின் திட்டங்களை கேட்டே

நரக அவஸ்தை அனுபவித்துச் சாகும்

வாழ்க்கை துக்கமாகும்

மரணம் தாசியாகும்

எப்பொழுதும் அதைத் தேடியே

மனம் ஓடும்

உலக இயந்திரம் அவனை

கரும்புச் சக்கையாய்ப் பிழியும்

பெருங்கூட்டமொன்று அந்தச் சாறு போதையென

தண்ணீரில் கலந்து குடிக்கும்

இப்பூலகில் கொடிய வேதனையை

அனுபவித்தவன் மரணித்தால்

சொர்க்கத்தில் வாயிலை தெய்வம்

வந்தா திறக்கும்

அப்படி திறந்தால்

அவன் கடவுளல்ல

விழிப்புணர்வு பெற்று

தட்டுபவனே கடவுள்

திறப்பவன் அல்ல

கைவிடப்பட்ட இவ்வுலகில்

உன் மீது அறையப்படும்

ஒவ்வொரு ஆணியும்

உன்னை புனிதப்படுத்தும்

உயிர்த்தெழுதல் அன்றல்ல

இன்றும் நடைபெறலாம்

இன்னொரு யுக புருஷன்

அவனாகலாம்

அவன் உங்கள் எதிரிலேயே

நடமாடலாம்.