நீ பார்ப்பாய் எனக் கருதியே
நானும் பார்க்கிறேன் நிலவை
இந்தப் பாடலை நீ எப்படி ரசிப்பாய் என
யோசித்துக் கொண்டே அந்தப் பாடலை
கேட்கிறேன்
உன் சுவாசப் பைக்குள்
புகுந்த காற்று
என்னிடம் உன்னைப் பற்றி
சங்கதி ஒன்று சொன்னது
என் பிரிவைத் தாங்காமல்
நீ சிந்திய கண்ணீர்த்துளிகளே
உலகில் பரிசுத்தமானது
அலையில் கால்களை நனைப்பது
உனக்குப் பிடிக்குமென்று
கடலைப் பார்க்கும் போதெல்லாம்
நினைத்துக் கொள்கிறேன்
திடீர் மழை உண்டாக்கிய
மண் வாசம்
உன் ஞாபகங்களை
கிளறிச் செல்கிறது
குடையை கையில் வைத்துக் கொண்டே
நாமிருவரும் நனைந்தபடி வந்தோம்
அந்த மழை நாளை மறக்க முடியுமா
நீ இல்லாத போது
ஊருக்கு வந்தால்
உன் காலடித்தடங்களை
தேடிப் பார்ப்பேன்
மண் மீது
நீ முதன் முதலாக
எனக்குப் பரிசளித்த கடிகாரம்
காலத்தைக் காட்டுவதற்குப் பதிலாக
கண்ணீரை வரவழைக்கிறது
நாம் வழக்கமாகச் சந்திக்கும்
ஆலமரத்தடி என்னை மட்டுமாய்
பார்த்து முகம் திருப்பிக் கொள்கிறது
சூடாத மலர்களாய்
விண்மீன் இல்லாத வானமாய்
இதழ்விரிக்காத பூவாய்
விடியலை வெறுத்தொதுக்கும் ஆகாயமாய்
நம் காதல்
பிரிவெனும் ஏக்கத்திலேயே
நெடுங்காலமாய்க் கழிகிறது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக